ஒரு ரூபாயுடன் நடிக்க வந்த அனன்யா!


மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘இரவும் பகலும்.’ பல வருடங்களுக்குப்பின், இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில் திருடனாகவும் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலும், எதிர்பாராத சம்பவங்களுமே இந்த படத்தின் கதை. மகேஷ்–அனன்யா கதாநாயகன்–கதாநாயகியாக நடிக்கிறார்கள். ஜெகன், ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தீனா இசையமைக்கிறார். பாலா ஸ்ரீராம் டைரக்டு செய்கிறார். ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் பெரியசாமி இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் பாலா ஸ்ரீராம் கூறியதாவது:– ‘நடுத்தர வர்க்கத்து குடும்ப பாசம் மற்றும் நகைச்சுவையுடன் புதுமையான காதல் படமாக இது தயாராகிறது. கதை சொல்லும் பாணியில் புதிய முயற்சியை கையாண்டிருக்கிறோம். அனன்யா கதை கேட்டதும் மிகவும் பிடித்துபோய் ஒரே ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் பெற்றுக்கொண்டு நடிக்க வந்தார். இந்த படமும், கதாபாத்திரமும் தன் சினிமா பயணத்தில் தனி இடத்தை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் மகேஷ் நடித்தார்.’