டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன தெரியுமா..?


டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் மாதம் 16-ந் தேதியன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். எஞ்சிய 5 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அது தொடர்பான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிறார் குற்றவாளிக்கான தண்டனை என்ன என்ற தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது பலாத்கார வழக்கில் சிறுவன் குற்றவாளி என்றும் அவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்ய முடிவு! ஆனால் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று மருத்துவ மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.