சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முஸ்தீபு: லெபானுக்கு தப்பியோடும் மக்கள்

சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இச்சண்டையில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் போராளிகள் பகுதியில் அதிபர் படையினர் விசக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்க தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனனுக்கு தப்பி ஓடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஐ.நா. ஆய்வாளர்களை பின் தொடர்ந்து மஸ்னா எல்லை வழியாக லெபனன் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். சிரியாவிலிருந்து வரும் அகதிகள் வருவதற்கு அருகிலுள்ள நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.