
தமிழ்நாடு, கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், சென்னையில், கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவர்கள் இருவரும், இலங்கையின் முக்கிய பகுதிகளில் குண்டு வைக்க திட்டமிட்டனர்.
இத்திட்டத்தை செயல்படுத்த, முன் சோதனை செய்வதற்காக, தமிழகத்திற்கு தப்பி வந்தனர்.
இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து, சோதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது, உடன் இருந்த, நால்வரும் பிடிபட்டனர்.
சிவனேசன், கோபி இருவரும் தப்பிவிட்டனர். இவர்களை, பொலிஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் சிவனேசனும், கோபியும் சுற்றித் திரியும் தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.