தங்க ஆபரணங்களை அடகு வைப்பதில் இலங்கை உலக சாதனை

ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் என்ற நிறுவனத்தின் புதிய தரப்படுத்தலுக்கு அமைய தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது. இலங்கையில் வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன்களில் 15 வீதமான கடன்கள் தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெறப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் இந்த நிலைமையானது 4.5 வீதமாக இருக்கின்றது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் இந்த சதவீதமானது மூன்று மடங்கு அதிகமாகும். இந்த நிலைமை காரணமாக உலகில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களில் இலங்கையின் வங்கிகள் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதால், மக்கள் தமது தங்க ஆபரணங்களை அதிகளவில் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அடகு வைத்து வாழ்க்கை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.