கற்பழிக்கப்பட்ட இளம் பெண் உடலில் தீயிட்டு தற்கொலை: நாசரேத்தில் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கைலாசபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மனுவேல்ராஜ் (வயது 53). இவர் சாத்தான்குளத்தில் மண்பானை, சட்டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜென்சி(வயது 22). கடந்த 20-ந்தேதி நாசரேத் வாரச்சந்தைக்கு சென்ற ஜென்சி வீடு திரும்பவில்லை. திடீரென மாயமான அவரை, அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் நாசரேத் பொலிஸசில் தந்தை மனுவேல்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில் ஜென்சியை, அவர் வசித்து வந்த தெருவை சேர்ந்த ஜட்சன்(27) என்பவர் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடினர். பின்பு ஜட்சனிடமிருந்து ஜென்சியை மீட்டனர். ஜென்சி போலீசில்அளித்த வாக்குமூலத்தில், `தன்னை ஜட்சன் கடத்தி கற்பழித்து கட்டாயப்படுத்தி பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும், வேறு யாரை திருமணம் செய்தாலும் உன்னை நிம்மதியாக வாழவிட மாட்டேன்' என மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார் ஜட்சனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் அடைத்தனர். பின்பு ஜென்சிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர். இட்டமொழியைசேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று(30-ந்தேதி) ஜென்சியின் தந்தை மனுவேல்ராஜ், தாய் மல்லிகா ஆகியோர் சாத்தான்குளத்தில் வாடகைக்கு வீடு பார்க்க சென்றனர். வீட்டில் ஜென்சியும், அவரது அண்ணன் ஜெபஸ்டினும் இருந்தனர். அப்போது அண்ணன் ஜெபஸ்டினை முட்டை வாங்கி வருமாறு கூறினார். இதனையடுத்து அவர் கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் ஜென்சி அறையை பூட்டிவிட்டு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார். கடைக்கு சென்றுவிட்டு சிறிதுநேரம் கழித்து ஜெபஸ்டின் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பூட்டிய அறையில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு ஜென்சி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாசரேத் போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தன்னை கடத்தி கற்பழித்து கட்டாய திருமணம் செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக ஜென்சி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபரால் கடத்தி கற்பழிக்கப்பட்டு கட்டாய திருமணம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாசரேத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.